ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

இஸ்லாமிய சகோதரத்துவம்


இஸ்லாமிய சகோதரத்துவத்தை பற்றியும், சகோதரத்துவத்தை பேணுவதற்கான வழிமுறைகளை பற்றியும், இஸ்லாமிய சமூகத்தை ஒற்றுமையோடும், வலுவோடும் காப்பதற்கான அணுகுமுறைகள் பற்றியும் நாம் எண்ணுவதற்கு முன்னால் அந்த சமூகத்தின் முக்கியத்துவத்தை அறிய வேண்டும். இந்த சமூகம் ஆற்ற வேண்டிய பணிகளைப் பற்றியும், இந்த சமூகம் அல்லாஹ்விடத்தில் எத்தகைய கண்ணியத்தையும், சிறப்பையும் பெற்றிருக்கிறது என்பதையும், கடந்த கால வரலாற்றிலும் சரி, சமகாலகட்டத்திலும் சரி இந்த உம்மத் எத்தகைய பங்காற்றி இருக்கிறது, எத்தகைய பங்களிப்பை, பணியை செய்ய வேண்டி இருக்கிறது என்பதையும் அறிந்தால்தான், அந்த அவசியத்தை உணர்ந்தால்தான் சகோதரத்துவம் என்பது சாத்தியம் மட்டுமல்ல, அதை பேணுவது நம்முடைய கடமை என்பதையும் உணர முடியும்.

முஸ்லிம் உம்மத்தின் முக்கியத்துவம்:
சிறந்த சமுதாயம்:
                    மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; 
(திருக்குர்ஆன் 3: 110)
மேற்கணட வசனத்திலிருந்து நாம் ஒன்றை புரிந்து கொள்ளலாம். இஸ்லாமிய சமூகம், இந்த உலகத்தை சீர்படுத்தி, மக்களை இறைவனின் பக்கம் திருப்ப, சமூகத்தில் நீதியையும், அமைதியையும் நிலைநாட்ட, மறுமை என்ற விசாலமான வாழ்வை குறித்த தெளிவை ஏற்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்க்ப்பட்ட சமூகம். முஸ்லிம் உம்மத், சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் பெரும் பங்காற்றி, மக்களை வழிநடத்துவதற்காக உள்ள ஒரு சமூகம் என்றும் புலனாகிறது. அதுமட்டுமல்ல, முஸ்லிம்களுடைய இருப்பு, இஸ்லாத்தின் இருப்பு, முஸ்லிம்களின் வலிமை, இஸ்லாத்தின் வலிமை, முஸ்லிம்களுடைய வீழ்ச்சி, இஸ்லாத்தின் வீழ்ச்சி என்ற விஷயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
                    அதைத்தான், பெருமானார் (ஸல்) அவர்கள், பத்ர் போரின் போது, அல்லாஹ்விடத்தில் , “இறைவா! இந்த கூட்டம் அழிக்கப்பட்டுவிட்டால், இந்த உலகத்தில் உன்னை நினைவுகூறுவதற்கு யாருமே இருக்க மாட்டார்கள். நீ வாக்களித்த வெற்றியை எங்களுக்கு வழங்குவாயாக” என்று பிரார்த்திக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல், பெருமானார் (ஸல்) அவர்கள் முஸ்லிம் சமூகத்தை கட்டமைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். சமூகம் ஒற்றுமையோடும், பரஸ்பர புரிந்துணர்வுடனும் இருப்பதற்கு அதிக அக்கறை செலுத்தினார்கள்.
பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்தவுடன், அங்கு பள்ளிவாசலை கட்டுகின்றார்கள், பின்னர் முஹாஜிர்கள், அன்சாரிகளை அழைத்து நீங்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற ஈமானிய உறவு முறையை ஏற்படுத்துகிறார்கள்.
அல்லாஹ் சுப்ஹானஹுத ஆலா தன்னுடைய திருமறைக்குர்ஆனில் கூறுகின்றான்:
                    ”நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்” – (திருக்குர்ஆன் 49:10)
எந்த நிலையிலும், இந்த சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தாமல் இருந்ததில்லை. அவர்களுக்குள் அவ்வபோது ஏற்படும் கருத்து வேறுபாடுகளை களைவதில் மிகுந்த அக்கறை செலுத்தினார்கள். அவர்களிடையே ஏற்பட்டுவிட்ட கருத்து வேறுபாடுகளை, தாமதிக்காமல் உடனே அதை நிவர்த்தி செய்தார்கள். அது போர்க்களமாக இருந்தாலும் சரியே.
உதாரணத்திற்கு, ஹுனைன் போரின் வெற்றியின் போது கிடைத்த கனீமத் பொருட்களை பெருமானார் (ஸல்) அவர்கள் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களுக்கு, குறிப்பாக மக்கா வாசிகளுக்கு, போரில் கலந்து கொண்ட மதீனாவின் அனசாரித் தோழர்களை விட கூடுதலாக பங்கீடு செய்கிறார்கள், இந்த பங்கீட்டில் அன்ஸாரித் தோழர்களில் உள்ள சில இளைஞர்கள் அதிருப்தி அடைகிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவாசிகளை முக்கியத்துவப் படுத்துகிறார்களோ என்ற ரீதியில் சில கருத்து வேறுபாடு அவர்களிடையே தோன்றுகின்றன. இதை பெருமானார் (ஸல்) அவர்கள் கேள்விப்படுகிறார்கள். உடனே அன்சாரித்தோழர்களை ஒரு இடத்தில் கூடுமாறு கட்டளையிடுகின்றார்கள். பின்னர் பெருமானார் (ஸல்) அவர்கள் அங்கு வந்து, அல்லாஹ்வை புகழ்ந்து விட்டு, கருத்து வேறுபாட்டைப் பற்றி அன்ஸாரித் தோழர்களிடத்தில், கேட்டுவிட்டு இவ்வாறு கூறினார்கள் , “இதோ, என்னிடமிருந்து கனீமத் பொருட்களை பெற்றுக்கொண்ட மக்கள, அந்த பொருட்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று, அவற்றை தங்கள் வீடுகளில் நிரப்ப தயாராகிகொண்டிருக்கிறார்கள். அன்ஸாரி தோழர்களே!, இதோ உங்கள் முன்னால், அல்லாஹ்வின் தூதராகிய நான் நிற்கின்றேன்.உங்களோடு வருவதற்கு தயாராக நிற்கின்றேன், என்னை அழைத்து செல்லமாட்டீர்களா? என்னைக் கொண்டு உங்கள் வீடுகளை நிரப்ப மாட்டீர்களா? என்று சொல்லிவிட்டு, மேலும் கூறினார்கள்- “மக்கள் அனைவரும் ஒரு பாதையிலும், அன்ஸாரித்தோழர்கள் ஒரு பாதையிலும் சென்றால், நான் அன்ஸாரிகள் செல்லக்கூடிய பாதையில் வருவதற்கு விரும்புகின்றேன். ஹிஜ்ரத் மட்டும் இல்லையென்றால் நான் அன்ஸாரிகளில் ஒருவனாய் இருந்திருப்பேன்” என்று கூறியமாத்திரத்தில், அன்ஸாரித்தோழர்களிடத்தில் இருந்த கருத்து வேறுபாடு கலைந்தது. மேலும் அவர்கள் இவ்வாறு நினைத்ததற்கு மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளாகித் தங்களுடைய தாடி நனையும் அளவுக்கு அழ ஆரம்பித்தார்கள். கருத்து வேறுபாடும் கலையப்பட்டது.
மேற்கண்ட நிகழ்வுகளிலிருந்து நாம ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும், கருத்து வேறுபாடுகளை முக்கியத்துவப்படுத்தி பிரிவினைகளை ஏற்படுத்த கூடாது மற்றும் இஸ்லாமிய சமூகத்தில் முதன்மையானது சகோதரத்துவம். ஓரிடத்தில் முஸ்லிம்கள் அனைவரும் சமூகமாக வாழ அல்லது வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் சகோதரத்துவத்தை முதலில் உருவாக்க வேண்டும் அல்லது மேம்படுத்த வேண்டும். அப்படி உருவாக்கப்பட்ட சகோதரத்துவத்தில் பிரச்சினைகள், பிணக்குகள் இல்லாமல் கொண்டு செல்வதற்கு பல வழிமுறைகளை இஸ்லாம் நமக்கு கற்றுத்தருகின்றது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…..
நன்றி இக்ரா . நெட் 

கருத்துகள் இல்லை: